ஆண்டவா
நீ எங்கே இருக்கிறாய்...?
"நீ தூணிலும் இருக்கிறாய்,
துரும்பிலும் இருக்கிறாய்,"
என்கிறார்கள் எம் பெரியோர்கள்...!
தூணும், துரும்பும்
உயிரில்லாததுக்கு
உதாரணம் என்று
உமக்கு தெரியாதா...?
அப்படி என்றால்,
உனக்கு உயிரில்லையா...?
உயிரில்லாத நீ
உயிருள்ள எம் மக்களை
உய்வினையிலிருந்து எப்படி
காக்கப்போகிறாய்....?
உன்னை நேரில் சந்திக்க
வேண்டுமென்றால்
எந்த நாட்டிற்கு வர வேண்டும்... ?
என்ன கொண்டு வரவேண்டும்...?
திருப்பதிக்கு போவதைபோல்
தங்கம் கொண்டு வரவேண்டுமா...?
திருத்தணிக்கு போய்
திரும்புவதைபோல்
மொட்டைபோட்டு வரவேண்டுமா...?
தரிசலத்துக்கு போவதைப்போல
கறுப்பாடை அணிந்து வரவேண்டுமா...?
வேளாங்கண்ணிக்கு போவதைப்போல
கால்கடந்து வரவேண்டுமா...?
மேல்மருவத்தூர் செல்வதைப்போல
கன்னிபெண்ணாக வரவேண்டுமா...?
எப்படி வந்தால்,
எங்கே வந்தால்
உன்னை சந்திக்க முடியும் என்று
என்னால் சிந்திக்க முடியவில்லை....
ஆண்டவா...?
நீ
ஆன்மீகவாதியா...?
இல்லை...
நாத்திகவாதியா...?
நீ
ஆண்.மீகவாதியா...?
இல்லை...
பெண்மீகவாதியா...?
நீ
அரசியல்வாதியா...?
இல்லை...
சுயநலவாதியா...?
நீ
யதார்த்தவாதியா....?
இல்லை...
எல்லோருக்கும் வியாதியா...?
சொல் ஆண்டவா... சொல்.
........
உனக்கு தெரியுமா...?
எம் பெரியோர்கள்
கழுதையின் புகைப்படத்தை
வீட்டு வாசலில் மாட்டி
கடவுள் என்று கோஷமிடுகிறார்கள்...
வேலை செய்யும்
தோட்டக்காரனை
வாசலுக்கு வெளியே நிற்கவைத்து
கழுதை என்று திட்டுகிறார்கள்...
கடவுளே...
"என்பிள்ளைக்கு
உயிர்கொடு" என்கிறான்...
உயிரே இல்லாத
கல்லை பார்த்து...!
கேட்டால்...
எல்லாம் ஒரு நம்பிக்கைதான்..
என்கிறான்...
தன் வீட்டில் தொலைத்த
பணத்தை...
பக்கத்து வீட்டில் போய்
தேடுகிறான்...
கேட்டால்...
நம்பிக்கை இல்லை
பக்கத்து வீட்டுக்காரன்மீது
என்கிறான்...
குழந்தைகள் ஏராளம்
என்றாலும்...
குழந்தையே இல்லை
என்றாலும்....
நீ மட்டுமே கள்ளப்புஷனாக்கப்படுகிறாய்
இங்குள்ள மனைவிமார்களுக்கெல்லாம்,
"எல்லாம் அவன் செயல்"
என்று கணவன்மார்கள் மேலே
கை தூக்கி சொல்லும்
ஒவ்வொரு முறையும்...!
ஆண்டவா...
பொய்,
புரட்டு,
களவு ,
கல்லாமை,
கற்பழிப்பு,
தீவிரவாதம்,
தீண்டாமை,
கோபம்,
கொலை,
இப்படி எல்லா பழிச்செயல்களுக்கும்
இங்கே மனிதன் உன்னை
"கை காட்டி"யாக்கிகொண்டிருக்கிறான்...!
அப்படி என்றால்
பழிச்செயல்களின்
மொத்த உருவம் நீதானா...?
வேண்டாம் ஆண்டவா வேண்டாம்,
இந்த பழிச்சொல்...!
வேண்டும் ஆண்டவா வேண்டும்
இந்த பூமிக்கு நீ வர வேண்டும்,
போதும் ஆண்டவா
போதும்...
இங்கே
மனிதன் மாமனிதனாக்கபட வேண்டாம்
மனிதன்...
மனிதனாக இருந்தாலே போதுமானது...!